Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Saturday, December 16, 2006

தமிழ்மணம்/தமிழன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

வணக்கம்
கடந்த சில வருடங்களாக தமிழ் உபயோகிக்காமல் மறந்துவிடும் போலிருந்ததால் ப்ளாக் எழுத வந்தவன் நான்.
அதனால் என் தமிழில் நிறைய பிழைகள் இருக்கின்றன. அதனை நிவர்த்தி செய்யவும் வழிகள் இப்பொழுது இல்லை.

நான் அடிக்கடி செய்யும் பிழைகளின் பட்டியல்:
1) வல்லினம் மிகுதலில் குழப்பம்
(அதாவது க்/ச்/த்/ப் போன்ற எழுத்துக்கள் தோன்றும் இடங்கள்
உ.ம்: "கடைக்கு போ" - இது சரியா,
இல்லை "கடைக்குப் போ" இது சரியா? )

2) ன/ண குழப்பம்

3) ல/ள குழப்பம்

இந்த இலக்கண Rules பற்றி யாராவது பதிவு எழுதியிருக்கிறீர்களா?
எழுதியிருந்தால் தொடுப்பு (links) தர முடியுமா?
அதை தமிழ்மணத்திலும் ஒரு Permanent Link ஆக வைக்க இயலுமா?
அப்படி செய்தால் புதிதாக தமிழில் எழுத ஆரம்பிக்கும் அனைவரருக்கும் உபயோகமாயிருக்கும் என்பது என் கருத்து.
தவறுகளை சீக்கிரம் திருத்திக்கொள்ளவும் உபயோகமாயிருக்கும்.

நன்றி.

23 Comments:

  • வசந்தன் பக்கத்தில் பாருங்கள்...உங்களுக்கு உதவியாயிருக்கலாம்.


    http://vasanthanin.blogspot.com

    By Blogger Pot"tea" kadai, at 1:52 AM, December 16, 2006  

  • நல்ல ஆலோசனை! தேடிப் பார்ப்போம்!

    By Blogger நாமக்கல் சிபி, at 2:21 AM, December 16, 2006  

  • வேறொரு பதிவில் இது குறித்து பல நண்பர்களும் எழுதிய நினைவிருக்கிறது. நானும் ஒரு பட்டியல் கொடுத்திருந்தேன். சுட்டி கிடைத்தால் தருகிறேன்.

    ஓரளவு எளிமையாக பொது இலக்கணம் படிக்க
    http://www.pudhucherry.com/pages/gram.html

    By Blogger ✪சிந்தாநதி, at 4:04 AM, December 16, 2006  

  • திரு Pot"tea" kadai, நாமக்கல் சிபி, சிந்தாநதி - அனைவருக்கும் நன்றி.

    By Blogger Kans, at 5:33 AM, December 16, 2006  

  • இலக்கணத்திற்குள் நுழையும் முன் ஒரு சிறு உத்தி.. எதையும் சொல்லிப் பாருங்கள்..ஓசையை வைத்தே மெய்க்குற்றங்களைத் தவிர்க்க முடியும் என்றே நினைக்கிறேன்.
    சான்றாக - "தவறுகளை சீக்கிரம்" என்பதைச் சொல்லிப் பார்த்தால் 'ச்' வேண்டுமென்பதும்
    "புதிதாக தமிழில் " - என்பதில் 'த்' வராது என்பதும் தெரிந்து விடுமே..

    By Blogger தருமி, at 8:14 AM, December 16, 2006  

  • வருக வருக தருமி அவர்களே...
    நீங்கள் சொல்லும் உத்தி சிறப்பானதுதான். ஆனால் அந்த உத்தி எனக்கு பலனளிக்கவில்லை,காரணம் என் ஞானக்குறைவுதான்.

    By Blogger Kans, at 9:19 AM, December 16, 2006  

  • /* இந்த இலக்கண Rules பற்றி யாராவது பதிவு எழுதியிருக்கிறீர்களா?
    எழுதியிருந்தால் தொடுப்பு (links) தர முடியுமா?அதை தமிழ்மணத்திலும் ஒரு Permanent Link ஆக வைக்க இயலுமா?
    அப்படி செய்தால் புதிதாக தமிழில் எழுத ஆரம்பிக்கும் அனைவரருக்கும் உபயோகமாயிருக்கும் என்பது என் கருத்து.தவறுகளை சீக்கிரம் திருத்திக்கொள்ளவும்உபயோகமாயிருக்கும். */

    நல்ல யோசனை. நானும் இந்த யோசனையை வழிமொழிகிறேன்.
    முந்தி, சில மாதங்களுக்கு முன் எழுத்துப்பிழை எனும் அன்பர் எல்லோரின் பதிவுக்கும் தானாகச் சென்று எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டுவார். இப்போது அவரைக் காண முடிவதில்லை.

    பலர் குழுவாக , ஆண்மீகம், வலைப்பதிவர் உதவிக்குழு என்று செயற்படுகிறார்கள். அது போல் தமிழ் சம்பந்தமான கேள்விகளுக்கும் சிலர் குழுவாகச் செயற்படலாம் என நினைக்கிறேன்.

    குறிப்பாக, இராம.கி ஐயா, ஞானவெட்டியான் ஐயா, செல்வராஜ் அண்ணர், குமரன், இராகவன், SK ஐயா, பொன்ஸ், செல்வநாயகி, கண்ணபிரான் இரவிசங்கர் போன்றோர் மனம் வைத்தால் செய்யலாம். செய்வார்களா?

    By Blogger வெற்றி, at 1:17 PM, December 16, 2006  

  • //கடைக்கு போ" - இது சரியா,
    இல்லை "கடைக்குப் போ" இது சரியா? //

    "கடைக்குப் போ" தான்.

    ல/ள குழப்பம் வர சாத்தியமில்லை; மாறாக ள/ழ குழப்பமே பெரும்பாலும் வருவதுண்டு.
    ஆனால் தொடர்ந்து தமிழ் எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பதிவர்கள் பலருக்கும் வரும் முதன்மையான சிக்கலை நீங்கள் சொல்லவில்லை.
    அது ர/ற சிக்கல். மிகமிக மோசமான வகையில் இந்தப்பிழை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
    அக்கரை, நொறுக்கு, நோறுங்கு, பொருப்பு, பொருப்பாளர், பொருமை என்று இப்பட்டியல் மிக நீண்டது என்பதோடு நிறையப் பேருக்குப் பொதுவானது.

    By Blogger வசந்தன்(Vasanthan), at 10:41 PM, December 16, 2006  

  • யோவ், பொட்டிக்கடை,
    வசந்தன் பக்கத்தில் என்ன கிடக்கெண்டு இணைப்புத் தந்திருக்கிறீர்?

    தருமி சொல்வதுதான் எனது ஆலோசனையும். சொல்லிப்பார்த்தால் தொன்னூறுவீத ஒற்றுச்சிக்கலைத் தவிர்க்கலாம். எனக்கு இது சாத்தியப்படுகிறது. ஆனால் சொல்வதே தவறாக இருந்தால் ஒன்றும்செய்ய முடியாது. முக்கியமாக 'ச'கரத்தை வல்லினமாக உச்சரிக்காமல் (இன்று பலரும் சொல்லின் தொடக்கத்தில் வரும் 'ச'கரத்தை Ch என்ற உச்சரிப்புக்குப் பதிலாக S என்றே உச்சரிக்கின்றனர். (Ch)சட்டை, (Ch)சண்டை, (Ch)சட்டி எல்லாம் Sa என்ற உச்சரிப்போடு சொல்லப்படுகின்றன) இருக்கும்வரை இந்த முறை சரிவராது.
    கடைக்கு சென்றான் என்ற இருசொற்களைச் சொல்லும்போது 'சென்றான்' என்பதற்கு வல்லின(ch) உச்சரிப்புக் கொடுத்தால்தான் இடையில் 'ச்' மிகுந்து ஒலிக்கும். இல்லையேல் ஒலிக்காது. அப்படி ஒலிக்காத நேரத்தில் சொல்லிப்பார்த்து எழுது என்பது சரிவராது.

    By Blogger வசந்தன்(Vasanthan), at 10:51 PM, December 16, 2006  

  • ஆங்கில சொற்களை தமிழ்படுத்த ஏற்கனவே இந்த
    http://groups.google.com/group/tamil_wiktionary குழு இருக்கிறது. அவர்களிடம் உங்கள் சந்தேகத்தை கேட்டால் உதவ வாய்ப்பு உள்ளது.

    சந்தோஷத்துடன்
    சந்தோஷ்

    By Anonymous Anonymous, at 11:10 PM, December 16, 2006  

  • திரு.வெற்றி,
    பிழை திருத்த/சந்தேகம் தீர்க்க ஒரு குழு என்பது சிறப்பான யோசனை.

    திரு.வசந்தன்(Vasanthan),
    Sa/Cha - இதேக் குழப்பம் தான் எனக்கு :-(

    By Blogger Kans, at 11:42 PM, December 16, 2006  

  • வருக சந்தோஷ் .
    உங்கள் தொடுப்பை (link) கண்டிப்பாகப் பார்க்கிறேன்.

    By Blogger Kans, at 11:42 PM, December 16, 2006  

  • அருள்,
    இந்தத் தளத்திற்குச் சென்று Eகலப்பை எனும் மென்பொருளை தரவிறக்கம் செய்வதன் மூலம் நீங்கள் தமிழில் எழுதலாம். நான் இந்தக் கலப்பையைத் தான் என் பணிமனையிலும் வீட்டிலும் பாவிக்கிறேன். இதோ முகவரி:
    http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?op=&cid=3

    By Blogger வெற்றி, at 11:50 PM, December 16, 2006  

  • பானை (Pot),

    /* யோவ், பொட்டிக்கடை,
    வசந்தன் பக்கத்தில் என்ன கிடக்கெண்டு இணைப்புத் தந்திருக்கிறீர்? */

    அதுதானே! நானும் எதோ வசந்தன் எழுதியிருக்காக்குமெண்டு அங்கை போனால் அங்கை ஒரு கோதாரியும் இல்லை.

    By Blogger வெற்றி, at 12:13 AM, December 17, 2006  

  • திரு.அருள்,
    தமிழில் எழுத நிறைய வழிகள் உள்ளன.
    (தமிழில் சரியாக எழுததான் நமக்கு நிறைய உதவி வேண்டும்)

    இந்த தொடுப்புகளைப் பாருங்கள்:
    http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

    http://perunthottam.blogspot.com/2006/12/blog-post.html

    http://www.higopi.com/ucedit/Tamil.html

    ekalappai என்னும் சிறந்த மென்பொருள் இங்கு கிடைக்கும்:
    http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

    By Blogger Kans, at 1:09 AM, December 17, 2006  

  • இரண்டாம்/நான்காம் வேற்றுமை உருபுகளை(ஐ/கு)த் தெரிந்து வைத்திருந்தாலே ஒற்று மிகுந்தும் மிகாமலும் எழுத வேண்டிய‌ பெரும்பாலான சொற்கள் பிடிபட்டு விடும்.

    இங்குச் சென்று பாருங்கள்:


    http://thamizham.net/innov/innov155.htm

    By Blogger ╬அதி. அழகு╬, at 1:29 AM, December 17, 2006  

  • http://pksivakumar.blogspot.com/2006_01_01_pksivakumar_archive.html
    Kans, இந்தச் சுட்டி உங்களுக்கு உதவலாம்.

    வசந்தன் சொல்வது போல், ற/ர குழப்பங்களும், ண/ன குழப்பங்களும் தான் மலிந்து தெரிகின்றன. ஒற்று மிகுதல் மிகாமல் இருத்தல் போன்றவை அத்தனை கஷ்டமாக இருப்பதில்லை...

    வெற்றி, இன்னுமொரு உதவிக் குழுவா!! :)))

    By Blogger பொன்ஸ்~~Poorna, at 1:47 AM, December 17, 2006  

  • புதிதாக தமிழில்??

    By Anonymous Anonymous, at 3:39 AM, December 17, 2006  

  • //2) ன/ண குழப்பம்//

    மூன்று சுழிகள் உடையதை, 'டண்ணகரம்' என்று நினைவில் வைத்துக் கொண்டால் ன்/ண் பிழைகளை எளிதாகக் களையலாம். ட்+உயிர் ஐ அடுத்து (ட்+அ=ட)வருதால் டண்ணகரமாயிற்று. உ-ம்:

    வண்டார்/வண்டு
    கண்டார்/கண்டு
    மொண்டார்/மொண்டு
    கொண்டார்/கொண்டு

    எனினும் தண்ணீர் என்று வரும்போது உங்களுக்குக் கண்டம் உண்டு. ;‍-)

    By Blogger ╬அதி. அழகு╬, at 3:43 AM, December 17, 2006  

  • வருக திரு. அழகு,
    நீங்கள் அளித்த Shortcut கண்டிப்பாக உபயோகமாக இருக்கும். நன்றி.

    By Blogger Kans, at 6:35 AM, December 17, 2006  

  • வருக பொன்ஸ்,
    உதவிக்குழு இல்லையென்றாலும் எங்காவது "அடிக்கடி செய்யப்படும் தவறுகள் " என்று ஒரு பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்...

    By Blogger Kans, at 6:40 AM, December 17, 2006  

  • வருக அனானி,
    //புதிதாக தமிழில்?? //
    புதிதாகத் தமிழில் என்பதுதான் சரியா?
    திருத்தியதற்கு நன்றி

    By Blogger Kans, at 6:42 AM, December 17, 2006  

  • அழகு,
    பேசாமல் அவற்றை (ட,ண) இனவெழுத்துக்கள் என்றுவிட்டால் என்ன?
    இனவெழுத்துக்கள் பற்றி யாருக்காவது விளங்கப்படுத்த வேண்டிய தேவை இருக்குமா?

    நாங்கள் டண்ணகரம் என்று பாவிப்பதில்லை.
    ஆனால் 'ந்' ஐ தன்னகரம் என்று பாவிப்போம்.

    இப்படித்தான் எங்கள் சகா ஒருவன் "'ல' வை வவ்வலவு எண்டு பாவிக்கலாம்" என்று நண்பர்களோடு கதைத்ததைக் கேட்ட வாத்தியாரிடம் "ஏன்ரா விசரா, 'ல'வைக் கூட ஒழுங்கா உச்சரிக்கத் தெரியாமல் பிறகென்ன தமிழ் வேண்டிக்கிடக்கு உனக்கு?" எண்டு வாங்கிக் கட்டிக்கொண்டது ஞாபகம் வருது.


    -வசந்தன்.

    By Anonymous Anonymous, at 9:55 AM, December 17, 2006  

Post a Comment

<< Home